Sunday, May 15, 2011

சட்டைப் பொத்தான்

இடம் பாரதி தமிழ் வித்தியாலயம்.இரண்டு பெரிய மலைகள்.நடுவே மவுசாகலை நீர்த் தேக்க சிறிய குடா ஒன்று.பாடசாலை அமர்ந்திருப்பதோ ஒரு மலை மேடு.அருகே சில உயர் வகுப்பினரின் சவங்களை எறிக்கும் தற்காலிக பொட்டல்.அடிக்கடி காடாகும் அந்தக் காடு. காற்று. அங்கு நேரடியாக வீசித் தொலைக்கும் . வெயிலென்றால் மண்ணை வாறிக் கொண்டு வரும். மழை என்றால் எப்போதும் அறிவிக்காத சூறாவளி தான் அந்தப் பாடசாலைக்கு. காற்றை நேசித்துக் கொள்ளும் மனங்களுக்குக் கூட வெறுப்பைத் தரும் அந்தக் காற்று.வெயிற் காலத்தில் எவ்வளவு தான் அழகாக நேர்த்தியாக வந்தாலும் தலையைப் பரட்டையாக்கி கண்களை தண்ணி அடித்தது போல் சிவப்பாகிவிடும் அந்தக் காற்று .அங்கு ஆண்கள் தலையை கட்டையாக வெட்டி விட்டால் தலைக்கும் சுகம்.பார்ப்பவருக்கும் கொஞ்சம் அழகாக இருக்கும்.
பெண்களுக்கு அது கொடுமை.எப்போதும் தூசி படிந்து தலைமயிர் மண்ணிறமாக பறந்து விரிந்து தம் இஸ்டம்போல ஆடிக் கூத்தடிக்கும் அந்த முடிகள்.
அன்று காலை 7.30 மணியிருக்கும் அந்தப் பாடசாலை அதிபரின் தலைமையில் காலைக் கூட்டம் ஆரம்பமாகியது.மாணவர்கள் அமைதியாக வரிசையாக வந்து நின்று கூட்டத்திற்குத் தயாராகினார்கள்.ஒவ்வொரு வகுப்பு ஆண்களும் பெண்களுமாக அவர்கள் நின்றது காலைக் குளிரில் சூரிய ஒளியைப் பெறுவதற்காகத் தான் இருக்கும்.இருந்தாலும் கொஞ்சம் சொல்வதைக் கேட்டுக் கொள்வார்கள்.
பாடசாலையின் காலைச் சுறுசுறுப்பு எப்போதும் ஒரு வேகந்தான்.ஆனால் அலட்டல் இருக்காது.ஒரு பயமுறுத்தல் இருக்காது.அதிபர் ஒரு பெண்மணி என்பதால் அங்கு மாணவர்களை மிரட்டுவது கிடையாது. ஒருவேளை தேவையில்லாமலட மாணவர்கள் கண்டிக்கப்பட்டாலோ பயமுறுத்தப்பட்டாலோ அவர்களுத வரவு காணாமல் போய்விடும்.ஏனென்றால் அங்கு தான் மாணவர்கள் பாடசாலை நாட்களில் கூட கிட்டியடிப்பதும் கிரிக்கெற் விளையாடுவதும் ஆற்றில் மீன் பிடிப்பதும் சிவனொளிபாத மலை சீசனில் கற்கண்டு,பழங்கள்,மற்றும் விற்பனைக்கான பொருட்களை அவர்கள் கூவி விற்றுத் திரிவதைக் காண முடியும்.இப்படி உள்ள ஒரு இடத்தில் அடக்குமுறை.சர்வாதிகாரம் எல்லாம் செல்லாது.அப்பா,அம்மாவே அங்கு பிள்ளளைகளை வளர்ப்பதில் சிலர் அக்கறை காட்டமாட்டார்கள்.
'ஐயோ!அம்மா...... லேட்டாகிருச்சு. ஓடுடா.... ஓடுடா....................'
குரல் வந்த பக்கம் அந்தக் கூட்டத்தின் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த ஆசிரியைகளின் காதுகளில் பட்டது.மெதுவாக பார்த்த அவர்களைப் பார்த்து
'டேய்! ஆந்தக்கண்ணு பார்த்திருச்சுடா... தெரியாம மத்தப் பக்கமா ஓடு....'
அதைப் பார்த்த ஆசிரியைகள்
'சேர், அந்தப் பக்கமா ரெண்டு பையன்கள் ஓடுறான்கள்.. வேகமாப் போயி புடிங்க....'
ஆசிரியை கமலி எப்போதும் சுறுப்பானவர்.ஆனால் இந்த விடயத்தில் ஏதோ சாதித்து விட்டது போல அந்த ஆசரியரை பின் தொர்ந்து அவரும் விரட்டத் தொடங்கினார்.
'டேய், நில்லுங்கடா. எத்தனை முறை சொல்றது.காலையில எங்களயும் ஓடிப் புடிச்சு விளையாட வக்கிறீங்க'
கூட்டத்துல ஒரு குரல் ஒலித்தது.
'ஓடுங்கடி.... ஓடுங்க....... எங்கள வெளயாடக் கேட்டா உடுறதுல்ல தானே! இப்ப ஓடுங்கடி... ஓடுங்க......
மூச்சு வாங்குதுல்ல..... '
அந்தக் குறும்புக்கார மாணவியின் நையாண்டி மாணவனுக்கல்ல.அந்த ஆசிரியர்களுக்கு! தங்களை விளையாட விடாத ஏக்கம் அந்தப் பிஞ்சு மனதுக்கு.கடவுளே அவர்களை பழிவாங்குவதாக அவளுக்கு ஒரு நினைப்பு.
காலைக் கூட்டம் சலசலத்துப் போனது.அதிபர் முதல் அனைவருக்கும் காலைப் பொழுதில் இப்படி ஏதாவதொரு நிகழ்ச்சி அங்கு திட்டமிடாமலே அரங்கேறும்.வேலி இல்லாத பாடசாலை.இதில் மதிலை எங்கு நினைப்பது? பெரிய பரப்பு!காணி அபகரிப்பு வேறு!அடுத்த வீட்டு காண்களில் வடியும் அசிங்கமும் அந்தப் பாடசாலைக்கு எப்போதும் ஒரு தொந்தரவு தான்.
'அம்மாடா! டேய் இங்க வாங்கடா....... ஒங்கள எத்தன முறை சொல்றது,ஆசிரியை கமலி அவர்களைப் பிடித்து விட்டார்.ஏமாற்றத்துடன் திரும்பிய ஆசிரியரின் முகத்தை சாதனைக் கமலி பெருமிதத்துடன் பார்த்தது.
'சேர், இந்த முறை இவங்கள அவுங்க அப்ப,அம்மாவ வர சொல்லி பேசனும். வாங்க பிரின்சிபல்ட்ட சொல்லி முடிவெடுப்போம்.'
'ஆமா டீச்சர், இவுங்கள இப்படியே உட்டுட்டா எல்லப் புள்ளங்களும் பழகிடுவாங்க'
பிசுபிசுத்துப் போன அந்தக் காலைக் கூட்டம் இன்று மட்டுமல்ல.பல நாட்களில் அப்பிடித்தான்.ஏனென்றால் அந்த்ப் பாடசாலை அமைப்பு அப்படி.எதையும் மறைத்துச் செய்ய முடியாது. திறந்த வெளியில் ஒரு கட்டடம்.
'என்னா டீச்சர்?காலையிலேயே இதப் பார்த்தா காலைக் கூட்டம். மத்த வேலையெல்லாம் வீணாப் போயிடுமே.....'
ஆசிரியை கமலி ஒன்றும் பேசவில்லை.ஆனால் அவள் பார்வை மட்டும் அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியது.
'சரி.. டீச்சர்... இவுங்கள நான் விசாரிக்கிறேன்...'
அதிபர் அந்த இரு மாணவர்களையும் நோட்டமிட்டார். அந்த இரு மாணவர்களது பாடசாலை சீருடைகள் மிகவும் அழுக்கடைந்திருந்தன.காற் சட்டைகள் பின்பக்கம் கிழிந்து வானத்தைப் பார்க்கும் அளவுக்கு வட்டமிட்டிருந்தது. போதாக் குறைக்கு காற் சட்டை சிப்புகளுக்கு அருகில் இன்னொரு சிப்பு தைக்க வேண்டிய நிலையில் தாழ்பாளும் கதவுகளும் இல்லாமல் ஒரு காற் சட்டை. தலை மயிர் அந்த தோட்டத்து பற்றைக் காடுகளை வெட்டிச் சாய்த்தாற் போல் எசகுபிசகாக அலங்கோலமாகக் காட்சியளித்தது.சட்டையின் கைகள் இரண்டும் கசங்கிப் போயிருந்தன.சட்டையிலுள்ள சேப்பு அங்கு மிங்குமாக பட்டம் விட்டுக் கொண்டிருந்தது.சட்டைக் கதவுகளின் பொத்தான்கள் சிதறடிக்கப்பட்டிருந்தன. மாறி மாறி சட்டையின் கதவுகள் தாழ்பாளிடப்பட்டிருந்தன.பின் பக்கத்தில் 'இன்னும் அவன் பயிற்சியில் இருப்பதற்கான அடையாளங்களாக 'எல்;;' போர்ட் பல தொங்கின.அத்தனைக் கிழிசல்கள்.'
'ஏனடா இப்படி வருகிறாய்... ஸ்கூலுக்கு எப்படி வறனும்னு எத்தனை முறை சொல்லியும் கோட்கிறாய் இல்லை.நீ அண்ணா சிலை அருகில் இருந்து தானே வாற? உன்னுடைய அப்பா மலையாண்டி தானே?'
'ஆமா மெடம்!அங்க இருந்து தான் வாறேன்.என்னா செய்யனும் டீச்சர்?'
அவனது கேள்வியில் எவ்வித பயமுமிருப்பதாகத் தெரியவில்லை.அவன் நிதானமாகவே இருந்தான்.நிர்வாகம் தான் ஏதோ சாதித்து விடலாம் என்ற நப்பாசையில் நாவில் எச்சிலை ஊறவிட்டுக் கொண்டிருந்தன. கமலிக்கு பெரும் சந்தோசம்!நூறு மீட்டர் ஓடிப் பிடிக்கப்பட்டவனல்லவா அவன்?ஆனால் ஏதும் நடக்கப்போவதில்லை என்பதை கமலியின் சக ஆசிரியை அர்ச்சனா நன்கறிந்திருந்தாள்.
அவள் அத்தோட்டத்தில் வசிப்பவள்.நாலும் தெரிந்தவள். ஒவ்வொரு வீட்டு விலாசமும் தன் கைப் பைக்குள் அவளுக்கு!மாயாண்டி? அவன் பெயரைச் சொன்னாலே அதிரும் அந்த ஊர்.இத்தனைக்கும் ஒல்லிக் குஞ்சு!சட்டைக்கும் சாரத்துக்கும் போர்த்திய ஒரு கத்தரி வெருளி!அச்சுக் குலையாமல் தலையை சீவிப் போர்த்தி எண்ணை வடிய விட்டு மீசை முறுக்கிய முகம்.எழும்புகளின் பள்ளத் திட்டுகளில் போர்த்தப்பட்ட தசைப் பொதிகள்.அந்த ஊரில் மவுசாகலை நீர்தேக்கம் வற்றும்போது பாலம் பாலமாக வெடிக்கும் சகதி மண் திட்டுகள் மீள் பிரதி எடுத்தது போல அவனது முகம்.இந்த முகம் மட்டுமே அவனது மூலதனம்.அதற்கு அவனுக்கு பலம் சேர்த்தது போல பலரையும் அதட்டும் குரல்!
இது போது மல்லவா? அந்த ஊரில் அவன் வில்லனாயிருப்பதற்கு? அங்கு யார் தான் அவ்வளவு தடிப்பமாக இருந்து விடப் போகிறார்கள்?
அதிபரின் காரியாலயம் முன்னாள் ஒரு சலசலப்பு.ஏதோ நடக்கப் போகிறது என்பது மட்டும் தெளிவாகியது.
'மேடம்....................... மேடம்................................... நான் வரலாமா?
அந்த அதட்டல் குரலுடன் அவன் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான்.அவன் கொஞ்சம் இங்கிதம் தெரிந்தவன். அதனால் தான் 'நான் வரலாமா?' என்ற வினா.
'வாங்க! வாங்க.........! உட்காருங்க'
'மேடம் எனக்கு உட்கார நேரமில்ல!தலய்க்கு மேல வேல கெடக்குது.....என்னா என்னுட்டு மகன் ராகுல கண்டபடி அடிச்சி ஏசினீங்களாமே.அவனுட்டு சட்டைய கிழிச்சி பொத்தான பிச்சி .................................... பாருங்க! ஒங்க டீச்சர் லெச்சனத்த!புள்ளங்கள இப்படியா போட்டு அடிக்கிறது?நெஞ்சுல எல்லாம் காயம் வேற!டீச்சர் என்னா அவனோட மல்லுக்கட்டுணாங்களா?
அவன் ஆக்ரோசமாய் ஓரேயடியாய் கமலி ஆசிரியை மீது தூக்கிப்போட்டான் ஒரு பெரிய வெடிகுண்டு.
அவன் தனது கோணத்தை அழகாகத் திட்டமிட் டு சிறுவர் துஸ்பிரயோகத்திற்கு அதனை மாற்றும் அளவிற்கு அவன் பேச்சுக் கொடுத்தான்.அதிபர் ஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்துப் போனார்.
நூற்றுக் கணக்கான மாணவர்கள் கூடியிருக்குமிடம்.திறந்த வெளி.மேட்டு லயன்களிலிருந்து பார்த்தால் அந்தப் பாடசாலையைப் பார்;க்கப் பூதக் கண்ணாடி தேவையில்லை.அவ்வளவு தெளிவாகத் தெரியும் தூரம் தான்.பிகு எப்படி? நியாயமாகச் சிந்திக்கும் மக்களும் அங்கில்லாமல் இல்லை.ஆனால் மாயாண்டி முன்னால் அது எல்லாம் செல்லுமா?
' ஐயா! இப்படியெல்லாம் பேசக் கூடாது. இது ஸ்கூல்'
'இது ஸ்கூல் மாதிரியா நடக்குது?நான் பொலிசுக்குப் போவேன்.கல்வியமைச்சர் எங்களோட ஆளு!ஒங்க எல்லாத்தயும் உண்டு இல்லன்னு பண்ணீர்றேன்.அது பொம்பள டீச்சர்னு பாக்கிறன். இல்லாட்டி இப்பவே வெட்டி சாச்சிருவேன்'
'ஐயா.நீங்க நினைக்கிறது தப்பு!அவன் தினமும் இப்படித் தான் வருவான் சட்டையெல்லாம் கிழிஞ்சு தான் இருக்கும்.நானும் பாரத்திருக்கிறேன்'
'மேடம்... எனக்கும் தெரியும்.... அவனுட்டு சட்டையும் கழிசானும் கிழிஞ்சி தான் இருந்துச்சு!ஆனா சட்டைப் பொத்தான் நல்லாதன் இருந்துச்சு.அவன மல்லுக்கட்டாட்டி எப்புடி அது கழடும்...?'
தர்க்கரீதியான அவனது கேள்வியில் திக்கு முக்காடிப்போனது பாடசாலை நிர்வாகம்.ஒரு மெல்லிய அழுகைச் சத்தம் அங்கு எழத் தொடங்கியது.
'அழாதீங்க கமலி.. தொழிலுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்.நாம சமாளிப்போம். கவலைப்படாதீங்க'
எந்த ஆறுதலும் கமலி டீச்சரை ஆறுதல்படுத்துவதாகத் தெரியவில்லை. சுமார் பத்து வருடம் மறே மேற் பிரிவுப் பாடசாலைக்கு தினந்தோறும் பஸ்ஸில் சென்று பிறகு ஏழு மைல் நடந்து சென்று மாலை வீடு திரும்பும் போது மாலை ஆறு மணியாகிவிடும். இப்போது மீண்டும் இடமாற்றமா? மாயாண்டி இப்போது மத்திய மாகாண கல்வி அமைச்சராகவே தெரிந்தான். இந்தப் பிரச்சினையிலிருந்து விடுபட அவள் அவன் கால்களில் விழுந்து விடலாமா என்று தோன்றியது.அவனுக்கு அமைச்சரிடம் உள்ள செல்வாக்கை அர்ச்சனா டீச்சர் அடிக்கடி ஞாபகப்படுத்தி காப்பாற்றுவது போல் பயமுறுத்திக் கொண்டிருந்தாள்.
'ஐயா .உங்க பிள்ளை நல்லதுக்கு தான் ஒங்கள கூப்பிட்டோம்.அவனப் பிடிக்கும் போது சட்டப் பொத்தான் கழன்டிருச்சு.நம்புங்க' என்றாள் பாவமாக!
'ஆனா டீச்சர்!என்னுட்டு மகன் நீங்க கையப் புடிச்சு இழுத்துட்டு வந்ததா சொல்றான்!சட்டப் பொத்தான பிச்சதா சொல்றான். அது பொய்யா' மாயாண்டி தன் மகன் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்திருப்பது தெரிந்தது.
'சரி ஐயா! நான் என்னா செய்யனும்..?'
'என்னா செய்யனுமா,இருக்கறது கவனம்'
'மன்னிச்சுக்குங்க ஐயா! இனிமே இப்படி நடக்காது'
'அப்ப நடந்தது உண்மையா'
தப்பிப்பதற்கு அவள் கேட்ட மண்ணிப்பு அவளுக்கே வில்லங்கமாய்ப் போனது.திருதிருவென முழித்தது அவளது கண்கள்.அதிபர் ஆசிரியைகள் பக்கமாகத் திரும்பினார்.
'டீச்சர்மாறெல்லாம் வகுப்புக்கு போங்க.பிறகு கூப்பிடுறேன்'
ஆசிரியர் கூட்டம் மெல்லக் கலைந்து வகுப்பறைக்கும் மரத்தினடிக்கும் சென்று இவ்விடயம் தொடர்பாக அலசத் தொடங்கியது.எதுவித சலனமோ கவலையோ இல்லாமல் மாணவர்கள் வகுப்பறைகளில் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர்.
'ஐயா.இந்தப் பிரச்சினை இனிமே வராம நான் பார்த்துக்கிறேன்.உங்க பிள்ளைக்கு சட்டை ஒன்னும் காற் சட்டையும் வாங்கித் தாறோம்.இத பெருசு படுத்தாதிங்க.விட்டுருங்க'
'ஏம் புள்ளைக்கு யாரும் உடுப்பு வாங்கிக் கொடுக்கத் தேவயில்ல.எனக்கு நியாயம் தான் கெடைக்கணும்'
'சரி ஐயா.இத நான் கல்வி அதிகாரிகிட்ட சொல்லி ஒங்களுக்கு தீர்வு எடுத்துத் தாறேன்.கொஞ்சம் பொறுங்க'
'அந்த டீச்சர் இங்க இருக்கக் கூடாது.என்னுட்டு கௌரவம் என்னாகிறது?அவள அனுப்பிப்புடுங்க சரியா'
'சரி.அத நான் பார்த்துக்கிறன்.நீங்க யோசிக்காம போயிட்டு வாங்க'
மாயாண்டி கோபத்துடன் வெளியேறினான்.
அதிபர் அவ்வாசிரியையுடன் கலந்துரையாடி அவளை அட்டன் கல்விக் காரியாலயத்திலும் அவள் பிரதிநிதித்துவம் செய்யும் மலையக ஆசிரிய ஒன்றியத்திடமும் சொல்லி அவளுக்குப் பொருத்தமான ஒரு பாடசாலையை பெற்றுக் கொடுத்தார். ஆனால் இன்றுவரை அப் பாடசாலைக்கு ஒரு புதிய ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. ராகுலுடன் வந்த மற்ற மாணவன் விசாரிக்கப்படவே இல்லை.அர்ச்சனாவுக்கு ஒரு சந்தோசம்.இனி அந்தப் பாடசாலையில் கமலி டீச்சர் இல்லை.பாவம் மாணவர்கள்.கமலி டீச்சர் வகுப்பு இப்போது நிரந்தரமாகவே சப்தமிடும் ஒரு வகு

புதிய சந்தா

- பெ.லோகேஸ்வரன் -
மேமலைப் பக்கம் அரசல் புரசலா வந்த சேதி அந்தத் தோட்டத்தையே ஒரு கலக்குக் கலக்கியது.
'அடியேய்!......................... அடியேய்......................................... நில்லுடி நானும் வாறேன்.............................'
குரல் வந்த பக்கம் கனகு மெதுவாய் திரும்பிப்பார்த்தள்.திரும்பிப் பார்த்தது அவளது தலைகள் மட்டும் தான்.கால்கள் அல்ல.
'வா.... வா... எனக்கு நிக்க ஏலாது. நீ சீக்கிரம் பின்னாடி வா'
அவள் தான் இந்த விடயத்தை போய் நடவடிக்கை எடுக்கப் போறதா ஒரு நினைப்பு! அவ்வளவு வேகம்
கனகுவின் கால்களுக்கு.புத்திக்கு மட்டும் என்ன?அது அதனை விட வேகமாகச் செல்கின்றது.
அலை மோதும் கூட்டம்.திருவிளாவிற்குக் கூட சில குடும்பம் குடும்பமாய் தான் போய் வரும்.ஆனால் இன்று வீட்டில் உள்ள நாய்,பூனை கூட வெளியில் தான்.அவ்வளவு அல்லோல கல்லோலம்!
'அப்படி என்ன?தலையா முழுகிருச்சு?எரும மாடு மாதிரி வந்து முட்டுற?கொஞ்சம் பாத்துப் போனா என்னா?'
'கோபிச்சுக்காத ஐயம்மா. போற அவசரத்துல கால் பட்டுறுச்சு.கோபிச்சுக்காத...'
சொல்லிக் கொண்டே மன்னிப்புக் கேட்ட குரல் மாயமாய் மறைந்தது.ஐயம்மா எப்போதும் யாராக இருந்தாலும் தெளிவாகப் பேசிவிடும் குணம் கொண்டவள்.
கனகுவும் ஐயம்மாவும் ஒன்றாய்ப் படித்தவர்கள்.படிப்பு என்றால் பெரிய படிப்பு.அந்தக் காலத்தில் அவர்களது படிப்பு தான் 'ஒசந்த படிப்பு'.ஒருவரல்ல!பலர் பாராட்டியிருக்கிறார்கள்.
1950 களில் இந்தப் படிப்பு தான் அவர்களை அந்தத் தோட்டத்தில் ஒரு 'யுனிவேர்சிட்டி'யாக பலருக்கு அடையாளம் காட்டியது.அவர்களது படிப்பில் தம்பி என்கிற தம்பிராஜாவும் முக்கியமானவன்.அவனும் அந்தத் தோட்டத்தில் ஜிப்பா வாத்தியாரிடம் படித்தவன்.
ஓடிய கால்கள் ஒரு இடத்தில் நின்றன.அந்த ஆற்றங்கரை இன்று 'குடிவிடுதல்' நிகழ்ச்சிக்காக நிரம்பியிருந்தது போல ஒரு பிரமிப்பு.ஆனால் அங்கு எந்த சமய நிகழ்ச்சிகளும் நடக்கவில்லை. முன்னாலிலிருந்தவர்களுக்கு மட்டுமே அங்கு என்ன நடக்கின்றது என்பது புரிந்த விடயம்.
'கனகு... எப்புடியாவுது சந்துல நொலஞ்சி போயிடு.ஓம் பின்னுக்கே நானும் வந்துடறேன்'
'சரி ஐயம்மா.நான் மொதல்ல போயிருறேன்.நீ பின்னுக்கே வந்துரு.....'
அந்தக் கூட்டத்தில் கனகுவும் ஐயம்மாவும் பாம்பினைவிட வேகமாக லாவகமாக உள்ளே நுழைந்தார்கள்.ஆர்வத்தில் வயதும் ஒரு தடையல்ல என்றிருந்தது அவர்களது கால்களுக்கு.
'ஐயோ! ஏம்புள்ளய கொண்ணுப் போட்டுட்டாங்களே! எப்புடி வேல செஞ்சி குடும்பத்தக் காப்பாத்துன புள்ள?இப்புடி அநியாயமா பாவிப் பயலுக கொழும்புல இருந்து பெட்டியில அனுப்பி வச்சிருக்காங்களே!
நாசமாப் போவானுக'
அந்தக் குரல் எட்டாங் கிளாசு வரை படித்து மாசாமாசம் ஐயாவீட்ல கைநிறைய காசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கொழும்புக்கு அனுப்பிய ரமணியின் அம்மாவின் அழுகைக் குரல்.
'வள்ளியம்மா...... இங்க பாரு என்னா நடந்துச்சு? என்னாடி இந்தக் கோலம்? ரமணிப் புள்ளய கொழும்புக்கு அனுப்பாத .... அனுப்பாத....ன்னு தலையில அடிச்சுக்கிட்டேனே? கேட்டியா?'
'யார்? ஐயம்மாவ? பாருக்கா....... ஏம் புள்ளய? ரதி மாதிரி இருந்த புள்ளய சின்னாபின்னமாக்கி நாசமாக்கிப் புட்டானுங்க.கடசியில அதுவா கயித்துல தொங்கிருச்சுனு சொல்லி பெட்டியில அனுப்பிட்டானுங்க'
'வள்ளி....இப்புடியே பொலம்பிக்கிட்டிருந்தா என்னா செய்யிறது?அண்ணனக் கூப்பிட்டு நடக்கிற காரியத்த பாரு.....'
'ஆமாம்.பொனத்த வூட்டுக்கு கொண்டு பொற வேலயப் பாருங்கப்பா... வள்ளி தள்ளு.... தள்ளு......
வாங்கப்பா யாரு மரணக் கமிட்டி ஆளுங்கல்லாம் இங்க வாங்க.தூக்குங்க.....தூக்குங்க....................'
'ஐயோ!.....ஐயோ......! ரமணி..... ரமணின்னு ஆசையாக் கூப்பிட்டவங்கள்லாம் இப்பப் பொனம்னு கூப்பிடுறாங்களே! கடவுளே...... இந்தக் கொடுமய எல்லாம் ஏம்பா என்னப் பார்க்க வக்கிற? என்னிய கூப்பிட்டிருந்தா நான் வந்திருப்பனே!'
வள்ளியம்மா சும்மாவே பேண் பரட்டைத் தலையுடன் தான் இருப்பாள்.முடி ஆடிக் கொரு முறையும் அமாவாசைக்கொரு முறையும் தான் சீவுவாள்.இப்போது 'எலவு வீடு' வேறு .இனிமேல் அவள் தலையைச் சீவினாள் அது குதிரைக் கொம்பு தான்.
'கனகு...வா... எங்க நம்ம தம்பியக் கூப்பிடு...... இதுக்கு ஒரு முடிவு கட்டணும்.இந்தத் தோட்டத்துல மட்டும் இதோட ரெண்டு சாவு.அநியாயமா போச்சு.கேக்க நாதியில்லன்னு துப்பத்தவனுங்க செஞ்ச காரியத்த தட்டி கேக்கணும்..... ஆளுங்கள ஒன்னு சேத்து போராட்டம் நடத்தனும்.பொனத்த தெருவுல வச்சி ஆர்ப்பாட்டம் பண்ணினா தான் அடங்குவானுங்க...'
'ஆமாம்... ஆமாம்...இவுனுங்களுக்கு இந்த n மாற ஒரு பாடம் படிப்பிச்சாதான் சரிவரும்.தம்பி கடைக்கு போயிட்டானாம்.வந்தோன கதப்போங்கக்கா.....'
'அவனுக்கு போனிருக்கு தானே? யாருகிட்டயாவது சொல்லி தகவல் அனுப்பு! ஒடனே ஆரம்பிச்சா தான் சரி வரும்.தோட்டத் தலைவர்மாரு,எளைஞர் சங்க பொடியன்களயும் கூப்பிட்டு வெசயத்த பேசிப்புடுவோம். தம்பி வந்தோன்ன மத்தத பேசுவோம்'
'அது தாங்கக்கா சரி. அவுங்கள்கிட்ட பேச எல்லாத்தையும் மேட்டு லயத்து காம்பறாவுக்கு வறச் சொல்லிட்டேன்.அவுங்க வந்திருப்பாங்க... வாக்கா நாமலும் போவோம்'
அந்தத் தோட்டத்தில் எத்தனை தலைவர்மார் இருந்தாலும் கனகு அக்காவுக்கும் ஐயம்மா அக்காவுக்கும் ஒரு தனி மவுசு தான்.தோட்டத்துல அவுங்களும் இந்திய வழக்குப்படி 'பதினெட்டுப்பட்டி'க்குப் பொறுப்பான பெண் நாட்டாமைகள் தான்.ஆனால் அநியாயம்னு நினைத்தால் பெண் சிங்கங்கள் இரண்டும் பட்டையைக் கிளப்பி விடும்.தம்பி இந்த சிங்கங்களுக்கு அப்புறம் தான்.கொஞ்சம் நிதானமா யோசிக்கும் ஒருவன்.இரு பெண் சிங்கங்களும் தங்களுக்குள் பாசத்துடன் அக்கா என்றே பேசிக் கொள்ளும்.
ஒருவாறு கூட்டம் கூடியது.புரட்சித் தலைவிகள் போல் அவர்கள் முன்னால் நின்று ரமணியின் மரணம் குறித்து பேசத் தொடங்கினார்கள்.
'ஏம்பா... மாணிக்கம் ஒன்னுட்டு கூட்டாளி புறொக்கர் பொன்னம்பலம் எங்க? அவன் தானே வேலய்க்கு ரமணிய அனுப்புனது?...... அவன கூப்பிடு.....'
'அவன்தான் அக்கா கொழும்புக்குப் போயி காரியத்த பார்த்தது.அதுனால் தான் இவ்வளவு சீக்கிரமா 'பொடி' வந்திருச்சு.இல்hட்டி இப்போதய்க்கு எடுக்க முடியாதுன்னு சொன்னான்'
'ஏய்... மாணிக்கம்...... ஒத வாங்காத.... அவன் யாருடா ரமணிக்கு.. புள்ள செத்தோன யாருக்குடா
மொதல்ல சொல்லணும்? 'பொடிய' கொண்டு வர மட்டும் தோட்டத்துல யாருக்கும் என்னான்னு கூடத் தெரியாது.பொன்னம்பலம் இந்தத் தோட்டத்துல கால வச்சான்னா வெட்டாம விடமாட்டேன்..அவன இந்தப் பக்கம் வர வேணான்னு சொல்லு.... சரியா... கவ்வாத்து கத்தி ரெடியா இருக்கு..... சீவிப்புடுவேன்......
அவன...'
ரமணியின் தாய்மாமன் குரல் ஆக்ரோசமாய் எழுந்தது.போதாதற்கு அவனுக்கு 'சப்போர்ட்டாய்' இன்னொரு குரல் வந்தது.
'இப்புடி ஒரு பொழப்பு பொழக்கறதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்.சாராயம் சாப்பாடுன்னு காசு கெடச்சோன்ன அவரு தான் ஊருல பெரியாளு மாதிரி பேசி முடிப்பாரு.. அவன விடக் கூடாது'
'போன சாவுலயும் இப்புடித்தான்.அவன் அம்பதாயிரம் காசு வாங்கிக்கிட்டு எலவு வீட்டுக்கு இருபதாயிரத்த கொடுத்து வாயடச்சுட்டான்.'
'புள்ளங்கள கூட்டிப் போயி வேலன்னு சேத்துவுட்டுட்டு அவுங்க செத்தா எவ்வளவு தருவீங்கனு கேட்டுப் பேரம் பேசிட்டு வாரான்போல.அதுனாலதான் செத்தவொடன அவனுக்கு மட்டுந்தான் சேதி வருது'
கூட்டம் புறோக்கர் பொன்னம்பலத்தின்மீது தன் வசைமாரியைப் பொழியத் தொடங்கியது.
'பொன்னம்பலத்த இந்தப் பிரச்சின முடிஞ்சோன பாத்துக்குவோம்.இப்ப என்னா செய்யனும் அதப் பத்தி பேசுங்க'
'அக்கா...நாங்க நம்ம கட்சி தலைவருக்கும் எம்பீக்கெல்லாம் சொல்லிட்டோம்.அவுங்க வாறேனு சொல்லியிருக்காங்க'
கூட்டத்தில் நையாண்டி கந்தன் தன் வழமையான நையாண்டித் தனத்தை எடுத்து விட்டான்.
'எதுக்குப்பா? பொனத்த தூக்கவா?இல்லாட்டி பேப்பர்ல அறிக்கவுடவா?'
'கந்தன் அண்ணன் மரியாத கெட்டுப் போவும்.பாத்து சரியா?எங்க தலைவர பத்தி பேசாத சரியா?'
சட்டையைப் பிடிக்காத குறையாக அவன் கூறினான்.நையாண்டிக் கந்தன் இதற்கெல்லாம் அசருபவன் அல்ல.
'அது சரி 'இம்போர்ட்' அமைச்சருக்கெல்லாம் சொன்னா அவுங்களும் வந்து பேரு ஒன்னு போட்டுக்குவாங்களே!கங்காணி 'செக்றோல்' புத்தகத்தை கொண்டுவாய்யா?'
'அது எண்ணான்னே! 'இம்போர்ட் அமைச்சரு?'
'ஓ! அதுவா? அது அவுங்க கொழும்புல மட்டுந் தான் இருப்பாங்க!அவுங்க இந்த மாதிரி எலவு வூடு,கோயில் திருவிழா.எலக்சன் மாதிரி நேரத்துல வந்து கூட்டத்தோட நின்னு படம் பிடிச்சு பேப்பர்ல போட்டு விலாசித் தள்ளுவாங்க'
'அப்பிடியாண்ணே..... அண்ணன், இங்க பாருங்க.... மகளிர் அமைப்பு,சிறுவர் உரிமை அமைப்புன்னு கொஞ்ச பேரு கௌம்பி வந்துக்கிட்டிருக்காங்க.....'
' எங்க பார்ப்போம்... போன மொற இவுங்க நாள தான் பேப்பர்.றேடியோன்னு ஓரே பரபரப்பா இருந்திச்சு.
ஒரு வாரமா மவுசா பேசப்பட்டாங்க.அப்புறம் அடுத்த சாவு மஸ்கெலியா பக்கம்னு கேள்விப்பட்டதும் அங்க ஓடிப் போயி கொடிப் புடிச்சாங்க.ஆனா கடசியில வருசம் ரெண்டாச்சு.இன்னும் நெயாயம் கெடக்கிலன்னு ஒவ்வொரு எலவு வீடா போயி அவுங்க பங்குக்கு கோசம் எழுப்புறாங்க.அவுங்களாளயும் ஒன்னும் செய்ய முடியல'
'அதெல்லாம் கெடக்கட்டும் அண்ணே இங்க நாம கூடியிருக்கிறது ரமணி சாவுல உள்ள மர்மம் வெளிய வரணும்.அதுக்காக நாம 'ஸ்டிரைக்' அடிக்கணும்.எத்தன நாள் வேல போனாலும் நாம போராடனும்.நெயாயத்த பேசாம வுடக் கூடாது'
ஐயம்மாவின் குரலுக்கு கனகுவும் மண்டையை ஆட்டினாள்.தோட்டம் முழுவதும் போராட்டத்தில் குதிப்பதென தீர்மானித்தது.அந்த நேரத்தில் ஆட்டோ சத்தம் கேட்டு அனைவரும் திரும்பிப் பார்த்தனர்.
தம்பி என்கிற தம்பிராஜா அவ்விடத்திற்கு வந்தான்.அவன் வந்ததுமே கூட்டத்தில் ஒரு சலசலப்புத் தோன்றியது.அந்த சலசலப்பு எதிர்ப்புச் சலசலப்பு அல்ல!தம்பியின் பேச்சைக் கேட்கத்தான்.
'நான் வரும்போதே எல்லாத்தையும் கேள்விப்ட்டேன்!ரமணியின் சாவுக்கு நான் மன வருத்தமடையிறேன்.இவ்வளவு பேரு இருந்தும் நம்ம தோட்டத்துல இது ரெண்டாவது சாவுன்னு நெனக்கவே வெட்கமாயிருக்கு.நீங்கள்ளலாம் என்னா முடிவு செஞ்சீங்க?'
கனகுவும் ஐயம்மாவும் தோட்டத் தலைவர்களும் மகளிர் அமைப்புத் தலைவிகளும் சிறுவர் உரிமை அமைப்புகளும் வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தமது கருத்துக்களை தெளிவாக முன்வைத்தன. அனைத்தையும் கேட்ட தம்பி
'நீங்க சொல்றதெல்லாம் சரி தான்.ஆனா இப்ப நம்ம முன்னால உள்ள சந்தேகத்த பொலிஸ் மூலமா நீதவானுக்கு சொல்லுவம்.அப்புறமா செய்ய வேண்டிய அடக்க வேலைகளச் செய்வோம்'
'அதெல்லாம் முடியாது.பொனத்த நடுரோட்டுல வச்சி ஆர்ப்பாட்டம் செய்யனும்.அப்பதான் நாம யாருன்ன எல்லாத்துக்கம் தெரியும்'
'அது தான் சரி,கட்சித் தலைவரும் பத்து மணிக்கு வாறேன சொன்னார.அந்த நேரத்துல ரொட்டல வச்சி ஆர்ப்பாட்டம் செஞ்சா தலைவரும் வர்ற நாள பப்ளிசிட்டி கெடக்கும்'
ஆளுக்கால் 'பப்ளிசிட்டி' பற்றி பேசுவதை கூட்டத்தில் மௌனமாக பலர் அங்கலாய்ப்பதையும் காது கூசக் கேட்கக் கூடியதாக இருந்தது.தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் தனியாக கூடிக் கதைக்கச் சென்றனர்.அவர்கள் கலந்துரையாடிய பின்னர் ஒரு முடிவுக்கு வந்தனர்.
'அப்ப சரிங்க!தோட்டமே ஒன்னுகூடி போராடனும்னு சொல்லும்போது நாங்க குறுக்கால நிக்க விரும்பல. ஒங்க விருப்பப்படியே செய்ங்க.நாங்களும் கலந்துக்கிறோம்'
குறிப்பிட்டபடி போராட்டம் அடுத்த நாள் மிகவும் எதிர்பார்ப்புடன் அரங்கேறியது.அனைத்து ஊடகங்களும்
கூடிவிட்டன.அமைச்ர்களும் கூடி விட்டனர்.ஓரே போராட்டக் கோசங்கள்.எங்கும் அமைதியில்லாமல் இரக்க குணத்தில் கூடியிருந்தவர்களுடன் உப்புக்குச் சப்பாய் கூடியிருந்தவர்களும் பப்ளிசிட்டிக் கிரவுடும் படங்களுக்கு 'போஸ்' கொடுக்கத் தயாராக இருந்தன.இடையிடையே இதனை தடுத்து நிறுத்த அணைவரும் கையில் தண்டால் எடுத்தார்கள்.போராட்டம் திசை மாறத் தொடங்கியது. 'எலவுப் போராட்;டம்' பேப்பர் அறிக்கையை காரணங்காட்டி கட்சி சண்டையாக மாறியது.யார் யாரோ 'பொனத்தைக் கொண்டுவர உதவி செய்ததாக ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்கள்.
வள்ளியம்மா தன் பிள்ளை மரணத்தில் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேயிலை மலையில் தன் ஓரே செல்ல மகனுடன் காத்திருந்தாள்.ரமணியின் 'பொனம்' அந்த பாதையில் இப்போது பொலிசாரின் வான் நோக்கிய துப்பாக்கிச் சூட்டு வெடிகளுடன் அரசாங்க மரிதையோடு அநாதரவாய்க்கிடந்தது.நியாயம் கேட்க வந்த கூட்டம் சிதயிறிருந்தது.வள்ளியம்மா மகனுடன் ரமணியின் உடலைப் பார்த்துப் பார்த்து அழுதாள்.பொலிசுக்கு அவள் யார் என்று புரியவில்லை.அவளுக்கும் சில தர்ம அடிகள் கிடைத்தன. பிள்ளையைப் பெற்று ஒழுங்காக வளர்க்காமல் சிறிய வயதிலேயே வேலைக்கு அனுப்பி அவள் வாழ்வை காவு கொண்டதில் அவளுக்குத் தானே உயரிய பங்கு.எதையும் பேசாமல் வாங்கிக் கொண்டால்.மனம் மட்டுமல்ல உடலும் மரத்துப் போய்தானே இருந்தது அவளுக்கு?

ஒரு வாறாக தோட்டம் அடங்கிப்போனது.பொலிசாரின் உதவியுடன் ரமணியின் உடல் கோர்ட்டின் ஓடர் படி அந்த ஆலமரத்து மயானத்தில் புதைக்கப்பட்டது.ரமணி வெளியில் நடப்பது எதுவும் புரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.வள்ளியம்மா இப்போது விசாரணை என்கிற பெயரில் பொலிசுக்கும் கோர்ட்டுக்கும் அலைகிறாள்.நீதி கேட்ட அனைவரும் ஒவ்வொருவராய் கழன்று போகத் தொடங்கினார்கள்.வள்ளியம்மா மகனுடன் பித்துப் பிடித்தவள் போல மகனுக்காக அவ்வப்போது வேலைக் சென்றாள்.
ஐயம்மா,கனகு,தம்பிக் குழு மீண்டும் கூடியது.அவர்கள் நிதானமாகப்பேசி முடிவு எடுத்தார்கள்.முதலில் நமது தோட்டத்தில் எத்தனை பிள்ளைகள் வெளியிடங்களில் வேலை செய்கிறார்கள்?அவர்கள் தொடர்ந்தும் படிப்பதற்கு என்ன பிரச்சினைஃ என்பதை சில படித்த இளைஞர்களின் உதவியுடன் திரட்டினார்கள்.ஒரு போயா தினம் அந்த கோயில் முற்றம் மீண்டும் கூடியது.நியாயம் கேட்டல்ல!இனி இவ்விதம் நடக்காமல் இருக்க மேற் கொள்ள வேண்டிய நடவடிக்ககைளுக்காக!.
தம்பியும் புதிய இளைஞர்களும் ஐயம்மாவும் கனகுவும் தோட்டத்து முன் மாதிரிக் குழு அமைத்திருப்பது பற்றி பேசினார்கள்.தோட்டத் தலைவர்கள்.மாவட்டத் தலைவர்கள் என பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒரு வாறாக தோட்டத்துப் பொதுமக்கள் அனைவரும் தம்பியின் கூட்டணிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்.இப்போது அந்தத் தோட்டத்தில் சுமார் நான்கு பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் மீண்டும் பாடசாலை செல்லத் தொடங்கிவிட்டனர்.
தொழிலாளர்கள் மாதாந்தம் கட்சிகளுக்குச் சந்தா செலுத்துவதுபோல அந்தப் புதியக் கூட்டணிக்கு மாதம் இருபது ரூபாய் தருகிறார்கள்.வங்கிக் கணக்கு பேணப்பட்டு தோட்டத்தில் கல்வியை மட்டுமல்ல குடிநீர்,வாசிகசாலை,சிறிய படிக்கட்டடுகள் .மரண வீடுகள்,திருமண வீடுகள் என் அனைத்திற்கும் யாப்பு ஒன்றினூடாகச் சேவை செய்கிறார்கள்.
இப்போது அந்தத் தோட்டத்தில் எவரும் வெளியிடங்களுக்கு வேலை செய்யச் செல்வதில்லை.ரமணிக்காக அவனது தம்பிக்கு படிப்புச் செலவையும் முன்மாதிரிக்குழு ஏற்றுக்கொண்டது.ஆனால் இன்று வரை ரமணிக்கு நியாயம் கிடைத்ததாகத் தெரியவில்லை.ஆனால் இனிமேல் அப்படி நடக்காது என்பதற்கு இந்த முன்மாதிரிக் குழு ஒரு நம்பிக்கை தரும் விடயம்.வள்ளியம்மா மனம் குளிர்ந்து போனாள்.தம்பிக்கு அவள் நன்றியை வார்த்தைகளால் கூறவில்லை.மனம் முழுக்க தம்பியும் ஐயம்மாவும் கனகுவும் அந்த இளைஞர்களும் நிரம்பியிருந்தார்கள்.

ஒரு துளிப் பனிக் காதல்

மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

------------------------------------------------------------------------------------
அந்தப் பனி மலைக் காற்று இதமாயிருந்தது. அப்போதெல்லாம் அனந்துவுக்கு அந்த பனி மலைப் பிரதேசத்தில் தன் காதல் துளிர்விடப் போகின்றது என்பது அனந்துவுக்குத் தெரியாது. அனந்து அவ்வளவு அழகானவல்ல.ஆனால் யாரும் அவனைப் பார்த்து வெறுக்கும் அளவிற்கு வசீகரமற்றவனுமல்ல!
அனந்து இளம் வயதிலேயே கலைகளில் ஆர்வம் உள்ளவன்.இசையும் பாடலும் அவனுக்கு இரு கண்கள் மாதிரி. அவன் பாடலில் இலக்கணம் கற்றவன் அல்ல! கேள்வி ஞானம் அவனது வித்தையை தேசிய ரீதியில் பிரசித்தி பெறச் செய்திருந்தது.
கொஞ்சம் கறுப்பு! கொஞ்சம் குள்ளம்! ஆனாலும் வசீகரக் குரலால் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வலம் வந்தான் அனந்து. அவன் பாதங்கள் இப்போது அந்தப் பனி மலைப்பிரதேசத்தில் காலடி வைத்தது. சில்லென்று வந்த தென்றலும் பனியும் அவனை முத்தமிட்டுச் சென்றது. அவன் அந்தத் தேயிலைக் காட்டின் வழியாகச் சென்று அதன் ஸ்பரிசங்களை நுகர்ந்து சென்றான். அவன் கால்கள் போன வேகம் அவனுக்குத் தெரியாது.
அனந்து அந்த பூந்தோட்டத்தை அண்மித்தான். விதவிதமான ரோஜாக்கள்.பூக்கள்,செடிகள்,இயற்கை அமைப்புகள் என அவனுக்கு அந்த நூரளைப் பூந்தோட்டம் மனதுக்கு இனிமையத் தந்து கொண்டிருந்தது.
மெலிய பனித் துளிகள் ரோஜா இதழ்களை வருடிக் கொண்டன.சூரியன் தனது மெல்லிய இளங்கதிரை மெல்லமாய் விசிறத் தொடங்கினான். அனந்துவுக்கு அந்தச் சூழல் அழகாகப் பிடித்திருந்து. தன்னையும் அறியாமல் இதமாய் அவன் அந்தப் புல் வெளியில் அமர்ந்து பாடத் தொடங்கினான்.
வருவோரையும் போவோரையும் மெல்லமாய் நின்று கேட்கத்தூண்டியது. அந்தக் கூட்த்தில் தான் அவனின் குரலில் மயங்கிப் போயிருந்தாள் அபி. அனந்துவுக்கு அபியைப்பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.
அபி! அவள் இள வயதிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவள். அதே நேரம் நல்ல கெட்டிக்காரி.படிப்பிலும் சரி, கை வேலைகளிலும் சரி அவளுக்கு நிகர் அவள் தாள். ஆனால் குடும்ப ஒழுக்கத்தை அவள் எப்போதும் மீறியதில்லை. வீட்டின் செல்லப்பிள்ளை. ஆனால் அப்பாவின் கண்டிப்புக்கு மட்டும் குறைவிருக்காது.
அபி. அனந்துவை நெருங்கினால்.டீவியிலும் வானொலியிலும் பத்திரிகையிலும் அவன் குரல் கேட்டும் படத்தைப் பார்த்தும் பழகியிருந்ததால் அனந்து அவளுக்கு அந்நியனாய்ப்படவில்லை. ஏதோ ஒரு துணிச்சலுடன் அபி தன் விருப்பத்தைக் கொட்டித் தீர்தாள் அனந்துவிடம். அவனும் அதனை ஏற்றுக் கொண்டான். எல்லா மேடைப் பாடகனைப் போல அனந்து பெண்கள் விடயத்தில் மோசமானவனல்ல. அபியும் அனந்துவும் அந்தப் பனிமலைப் பிரதேசத்தில் அந்தஸ்து,ஜாதி வரம்புகளை உடைத்தெறிந்து காதலை வளர்த்து திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.
ரோஜாப் பூக்களின் பனித் துளிகள் மெல்மாய் உருகி இலைகளின் மீது படியத் தொடங்கின. அனந்து,அபி இருவரது உணர்வுகளும் பார்க்கிறவர்களை வியப்பிலாழ்த்தின. யார் கண் பட்டதோ தெரியாது. அந்தச் செய்தி கேட்டு அந்தத் தோட்டத்து மக்கள் வாய் புலம்பி நின்றனர். ஏன் தெரியுமா? அபியின் சடலம் அந்த ஆற்றங்கரையில் ஒதுங்கியது தான்!
'யாரு செஞ்ச கொடுமடா இது? இப்புடி இந்தப் புள் செத்துக் கிடக்குதே!' புலம்பல்கள் ஓயவில்லை. அம்மா..............அம்மா ........................ எழும்பி வாம்மா.............. எனக்குப் பசிக்குது................................... அந்த பிஞ்சின் குரல் கேட்க நாதியற்றுப் போனால் அபி! அனந்து பேச முடியாது வாயடைத்துப் போனான். அபி ஏன் இறந்தாள்? அவளுக்குள் அப்படி என்ன பிரச்சினை தான் இருந்தது? ஊரில் எவருக்கும் புரியவி;ல்லை.
அபியின் மூன்று வயது மகள் தனித்துப் போனாள்.அவளுக்கு எதுவுமே புரியவில்லை.அனந்துவின் பாடல்களில் மட்டும் முகாரியின் இசை நெஞ்சை வருடிக் கொண்டிருந்தது. அவனது செல்ல மகள் ஒரு துளிப் பனிக் காதலின் சின்னமல்லவா? இருந்தும் அவன் அபியின் கவலையில் மகள் அக்சயாவை மறந்து போயிருந்தான்.
அந்தப் பிஞ்சு வயசிலேயே அக்கம் பக்கத்திலுள்ள வீடுகளில் அவளுக்கான உணவையும் உடையையும் பிச்சையாகப் பெற்றுக் கொண்டாள். அக்சயா உண்மையல் ஒரு இளம் தேவதை! அவளை எப்படியாவது வீட்டில் வளர்த்தால் சம்பளமில்லாத வேலைக்காரி! அந்த தோட்டத்து பெட்டிக் கடை முதலாளி பாசமாய் அரவணைப்பது போல அரவணைத்துக் n காண்டான்.
அக்சயா தான் யார் என்று புரியாமலே அந்த வீட்டின் நிரந்தர வேலைக்காரியானாள்;. வயது பதினெட்டாகியும் மழைக்குக் கூட ஒதுங்காத பாவியானாள். இப்போது பெட்டிக் கடை முதலாளிக்கு பணக்; கஸ்டம் வேறு! அக்சயா வெளிநாட்டு வேலைக்காரியானாள்.
வருடம் இரண்டு கடந்தது! அக்சயாவின் சவம் நாளைக்கு பிலேனில வருதாம்! இதுதான் அந்தத்
தோட்டத்தின் புதிய செய்தி! ஊர் பழையபடி பினதத்தத் தொடங்கியது! அக்சயாவின் சவம் நாளை புதைக்கிறார்களாம! கோர்ட்ல எறிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம். அந்த ரோஜாவின் பனித்துகள் இலையிலிருந்து கீழே கண்ணீராய் விழுந்தது! மதியமாகி இரவாகியது.ரோஜாவும் தனது இதழ்களை அக்சயாவிற்காக ஒவ்வொரு இதழாய் உதிரர்க்கத் தொடங்கியது! அக்சயா எந்தப் பூவையும் சூடாமல் அமைதியாக அந்தப் பனி மலைப் பிரதேசத்தில் தனது நிரந்தரப் படுக்கையை அரவணைத்துக் கொண்டாள்......................!

தொழுவமும் தோஹா கட்டாரும்

மஸ்கெலிய பெ.லோகேஸ்வரன்

(யாவும் அனுபவக் கற்பனைகள்)

அந்த மார்கழிப் பனிக்காற்றில் விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் சந்ராவின் மாட்டுத் தொழுவம் பொலிவாயிருந்தது. தொழுவத்தின் முற்றத்தில் மாட்டுச் சாணம் தெளித்து மாக்கோலமிட்டு வாசலில் சாணப்பிள்ளையார் கொழுவிருக்க பறங்கிப்பூவின் அழகோடு அமைதியாய் விழாக் கோலமிட்டிருந்தது அந்தப் பகுதியில் அது கோவிலாகவே தென்பட்டது. அத்தனை தூய்மை!
சந்ரா வேலை என்று வந்து விட்டால் விடியாற்காலை எல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டல்ல! கடமை என்று வந்தாள் அவளுக்கு நிகர்; அவள் தான். அந்தக் காலைப் பனியில் ஆற்றுத் தண்ணீரை அள்ளி கொண்டு வந்து வீடுவாசல் கழுவி, திண்ணை மெழுகி,அடுப்பு மெழுகி அண்டாகுண்டா,சருவமெல்லாம் தண்ணீர் நிரப்பி வீட்டிலுள்ள துணிகளை எல்லாம் துவைத்து நீராடி இறைவனுக்கு விளக்கேற்றி அப்பப்பா! எத்தனை வேலைகள் சந்ராவிற்கு!ஒரு மாதாந்த பில் கட்டாத மெசின் சந்ரா! ஓய்வு என்பது அவளுக்கு எப்போதும் கிட்டியதுமில்லை. அதனை அவள் எதிர்பார்ப்பதுமில்லை! காலச் சக்கரம் அவள் கால்களுக்கும் கைகளுக்கும் சக்கரமிட்டு அலங்காரம் பண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தது.
சந்ரா இப்போதெல்லாம் ஓரேயடியாக அலுததுக் கொள்வாள். அவள் அலுத்துக் கொள்வதிலும் நியாயமில்லாமல் இல்லை.
'ச்சீ................... என்னடா இந்த வாழ்க்கை. எந்த நாளும் இந்த ஆட்டோடும் மாட்டோடும் போலராட வேண்டியிருக்குது. வீட்ல ஒரு டீ.வி இருக்கா, றேடியோ பெட்டி இருக்கா? போன வருசம் வாங்கின அந்த சின்ன றேடியோ பெட்டி இன்னும் அடகுக் கடயில பாடிக்கிட்டிருக்கு! அவன் வீட்டு திண்ணயில, அடுப்படியில, படுக்கயிலனு ஒவ்வொரு எடத்துக்கும் எத்தன றேடியோ பெட்டி, எத்தன டீ.வி! அடுக்க முடியாம அவன் திண்டாடுறான். நாம இங்க சேதிய கே;கிறதுனா கூட அடுத்தவன் தகவல் சொல்ல வேண்டியிருக்கு!'
அவளது முகம் சினத்திலும் வெறுப்பிலும் களையிழந்திருந்தது. அந்த வெறுப்பிலும் நியாமில்லாமல் இல்லை. அவளது உணர்வுகள் அடுத்தவர்களுக்கு வேண்டுமானால் கேளிக்கையாக இருக்கலாம். ஆனால் சந்ராவிற்கு................!
'என்னாங்க? இப்புடியோ தெனமும் மாட்டுக்கு புல் அறுத்தும் கோழிக்கு தீணி போட்டும் நீங்களும் நானும் காலத்த ஓட்ட முடியுமா?' அவள் ஆதங்கப்பட்டுக் கொண்டாள்.
ஏழைகளின் வாழ்வில் எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் காலம் தந்த பரிசல்லவா? இதில் சந்ரா மட்டும் விதிவிலக்காக முடியுமா என்ன?
'இங்கபாரு புள்ள.. இந்தத் தோட்டத்துல ஆடு மாடுனு வளர்க்கிற நம்மலப் பார்த்து எத்தனப் பேரு பொறாமப் படுறாங்க தெரியுமா? ஆனா நீ......... இதுவும் பத்தலனு இன்னும் ஆசப்படுற.......................... இருக்கிறதவுட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசப்படுதுல என்ன நெயாயம்?'
சந்ராவின் கணவன் நிதானமானவன். எதனையும் தீர்க்க தரிசனத்துடன் யோசிப்பான். சந்ராவிற்கும் அவனுக்கும் மாட்டுச் சாண வாசனைகள் எல்லாம் பழகிப் போன ஒன்று. அவர்களுக்கு பெரும்பாலும் தங்கள் மீது அடிக்கும் எந்த வாசனையுமோ எந்த நாற்றமோ அவர்களுக்குப் புரிவதில்லை! அந்தளவிற்கு உழைப்பையும் அவர்களையும் பிரிக்க முடியாது! ஆனால் வருவாய் போதுமானதாக இல்லை. பிள்ளைகளோ மூன்று தான். அவர்களது படிப்பிற்குப் பணம் தேவையல்லவா?
சந்ரா தீர்க்கமாக தனது வெளிநாட்டு மோகத்தை அவளது கணவன் வேலுசாமியிடம் தெரிவித்தான். வேலுசாமிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை.கூழோ கஞ்சோ எல்லாரும் ஓரிடத்தில் வாழ்ந்து சந்தோசமாயிருக்க வேண்டும் என் நினைப்பவன் அவன்!ஆனால் சந்ராவின் இந்துப் புதிய டாம்பீர வாழ்க்கை மோகத்திற்கு அவன் விரும்பியோ விரும்பாமலோ தலைவணங்கிப்போக வேண்டிய கட்டாயம்.
வேலுசாமி தலையாட்டிப் பொம்மையானான். அன்று திங்கட்கிழமை சந்ராவின் டோஹா கட்டாருக்கான பயணச் சீட்டு ஏஜென்டு மொகிதீனால் வழங்கப்பட்டது. வீட்டில் தடபுடலான விருந்து! அவளுக்கும் பிரியாவிடை வைபவம் நடைபெற்றது! சந்ராh தனது பிள்ளைகளையும் கணவன் வேலுசாமியையும் மறந்து புதிய பயணம், எதிர்கால வாழ்க்கைபற்றி கனவு காணத் தொடங்கினாள். புதன் கிழமையும் வந்தது. அவள் கொழும்பு கட்டுநாயக்க விமானத்தில் பல வெளிநாட்டு வேலைக்காரிகள் வரிசையில் பயணமானாள்.
வருடம் இரண்டோடியது! அவளது இலங்கை வருகை ஊர்ஜிதம் செய்யப்பட்டது. வேலுசாமி அயருக்கு வாகனத்தைப் பிடித்துக் கொண்டு கட்டுநாயக்கவிற்கு பயணமானான். அவனது மனதில் இன்னமும் பழைய சந்ரா குடி கொண்டிருந்தாள். ஆனால்................. வந்த சந்ரா.................... அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை................... அத்தனை மேக்கப்புடன் அழகாய் சிங்காரித்து கண்ணாடியணிந்து டிறவுசருடன் குதிக்கால் பாதணியுடன் .................... நடிகை தோற்றுப் போனாள்..................... சந்ரா! அத்தனைப் பேரழகியானாள்!
வேலுசாமி அன்று தான் வெள்ளைச் சாரத்துடன்........ அயண் பண்ணிய சட்டையுடன்............... அந்த தோட்டமே அவனை நக்கலடித்து அனுப்பியிருந்தது. சந்ரா அந்த தோட்டத்திற்கு வந்தாள். வீட்டில் ஏக தடபுடல்................! தோட்டமே அவளை வேடிக்கை பாரத்தது! அன்றைய பொழுது கழிந்தது.
இரவு வந்தது............. வேலுச்சாமி தனது ஆசை மனைவியை கொஞ்சம் அளவுக்கதிகமாகவே நேசித்து................ அன்று தான் திருமணமாகி முதலிரவுக்குக் காத்திருந்தவன் போல் வெட்கப்பட்டு அந்தப் படுக்கையறையை அடைந்தான். ஆனால்........ அவன் அருகே வந்ததும் சந்ராவிற்கு ஏகப்பட்ட கோபம்...................
'ச்சீ....... என்ன .................... இப்புடிச் சாண நாத்தம்............ ஐயோ.........கொமட்டுது ...................... வெளிய போ....................'
சந்ராவின் இந்தத் திடீர்பாய்ச்சல் அவனை வெட்கித் தலை குனிய வைத்தது. பொழுது விடிந்தது. வீட்டில் ஓரே கலேபரம்! வேலுசாமியை விவாகரத்து செய்ய சந்ரா திடசங்கற்பமாயிருந்தாள்! ஆனால் தோட்டத்து மக்கள் ஒன்று கூடி சந்ராவிற்கு எடுத்துச் சொல்லி அவளது மனதை மாற்றினார்கள். ஆனால், சந்ரா மீண்டும் டோஹா கட்டாருக்குப் பயணமானாள். அவளுக்கு இந்த தோட்டத்து தொழுவத்து வாழ்க்கையைவிட டோஹா கட்டார் வாழ்க்கைப் பிடித்துப் போயிருந்தது! போனவள் இன்று பதில் ஏதும் இல்லாமல் காணாமல் போயிருந்திருந்தாள்.. ஆனால்....... வேலுசாமி மட்டும் சந்ராவிற்காக ஒரு நப்பாசையுடன் வீடு, வாழ்க்கை, நடை, உடை, பாவனைகளை மாற்றி 'டடா..மம்மி...........கம் இயருக்கு............ மாறியிருந்தான்.......... ஆனால்...... சந்ராவின் தொலைந்த விலாசத்தைத் தான் அவனால் இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை!.
முற்றும்.

'பெட்ணி' பெருமாள்

மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்
(அனுபவங்களின் கற்பனைகள்)

'என்னடா வாழ்க்கை?..................... எத்தனை நாளைக்குத் தான் இந்தப் 'பெட்ணி' சாமான்களுடன் அல்லாடுவது? ஒரு பெட்டிக் கட வச்சிப் பொழச்சிக்கலாமுனாலும் இருக்குறதே ஒரு முழங் கட்ட: இதுல எங்க நிக்கிறதுக்கு எடங் கெடக்கப் போவுத?'
பெருமாளின் அந்த வார்த்தைகள் நிறம் மாறாதவை.அவன் அப்போது தான் அந்த வாழமலைத் தோட்டத்திற்கு வந்து அந்த தேயிலைப் பக்கமாயுள்ள ரோட்டுக் கல்லில் அமர்ந்திருந்தான். காலை ஆறு மணிக்கெல்லாம் அந்த எமல்டன் தோட்டத்து ஏற்றத்தில் ஏறி கால்கடுக்கச் சென்றவன் ஒண்பது மணிக்கெல்லாம் சென்றடைந்துவிட்டான். அங்கு அந்த லயத்தில் ஒவ்வொரு வீடாக 'பெட்ணி' சாமான்களை விற்று பழைய கடனை வசூல் செய்து புதிய கடனை எழுதிக் கொண்டு வந்தான்.
'என்னா.............. பெருமாள்? அசந்து ஒக்காந்துட்ட? எமல்டன் பக்கமா போயி வந்துட்டியா? எப்புடி யாவாரம் நடந்துச்சா?' அந்த வழியாக வந்த துணிமணிகளைக் கொண்டு வந்த ஏகாம்பரம் வினவிக் கொண்டான்.
'எங்கப்பா................... யாவாரம்.........................' சலித்துக் கொண்ட பெருமாளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஏகாம்பரத்திற்கு 'அப்படின்னா இன்னக்கி நம்ம யாவாரமும் இருக்காதா.................' மனதிற்குள் அவன் ரொம்பவே யோசித்தான்.
'அப்ப சரி.............. பெருமாள்.நான் எமல்டன் பக்கமா போயிட்டு வாறேன்.............................' விடைபெற்றான் ஏகாம்பரம்.
பெருமாள் வியர்த்துவடிந்த அந்த வியர்வைத் துளிகளை கையால் துடைத்துவிட்டு அருகிலிருந்த ஓடையில் கையை அலம்பி முகம் கழுவி உணவுக்காகக் கொண்டு வந்த அந்த ரொட்டித் துண்டையும் சம்பலையும் கடித்துக் கொண்டான்.அவனது உழைப்பிற்கும் பசிக்கும் அந்த ரொட்டித் துண்டுகள் தான் தாக்குப் பிடிக்கும்.
உணவை உண்டவன் மீண்டும் தலையில் 'பெட்ணி' சாமான்களை சுமந்தபடி வாழமலைத் தோட்டத்தில் தனது வியாபாரத்தை ஆரம்பித்தான்.
'பெட்ணி..............பெட்ணி..........................பெட்ணி...............................பெட்ணி.....................................'
கூவிக் கூவியே அவன் வாய் வரண்டு போயிருந்தது. என்றாலும் 'இன்றைக்குள் கொறஞ்சது ஒரு ரெண்டாயிரமாவது தேடனும்.அப்ப தான் மக வினோதாவின் ஸ்கொலசிப் பரிட்ச செமினாருக்கு..... டெஸ்ட்டுக்கு........ பொத்தகம் வாங்க................. டியுசன் காசு கட்ட......................... எல்லாத்துக்கும் சரி வரும்.ஆனா இந்த வாரம் சாப்பாட்டுக்கு......................................... எப்புடியாவது ஒத்தக்கடயில பேசி கொஞ்சம் கடன் வாங்குனா தான் சமாளிக்க முடியும்.......................' என்று மனம் போன போக்கிலே பெருமாள் புலம்பிக் கொண்டான்.
அந்த வாழமலைத் தோட்டத்து மக்கள் மிகவும் நல்லவர்கள். 'பெட்ணி' சாமான்களான வளையல்,செயின்,மோதிரம்,பொட்டு,கயிறு என ஒரு ரெண்டாயிரத்துக்கு மேலாக வாங்கி அவன் நெஞ்சில் பாலை வார்த்தார்கள்.எமல்டன் வியாபாரத்தில் தேடிய எட்டுநூறும் அவன் கையில் இருந்தது. இன்னும் எமல்டன் தோட்டம், முள்ளுகாமம் தோட்டம்,மறே தோட்டம் என அஞ்சாறு தோட்டம் இருக்கும். எப்புடியும் ரெண்டு..............மூனு...................தேடிப்புடலாம்.............................' பெருமாள் தைரியமானான். கடவுள் அவன் மீது கொஞ்சம் கருணையுடையவனாகவே இருந்தான்.
பொழுது புலர்ந்தது.எல்லா தோட்டங்களையும் பெருமாள் ஒரு கை பார்த்துவிட்டான்.அடுத்த நாள் அந்த ஸ்கூல் பட்டியலுக்கு பணம் செலுத்தியது போக எஞ்சியதில் கொஞ்சம் சாப்பாட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டான். மகள் வினோதா வகுப்பில் நல்ல கெட்டிக்காரி. டவுனுப் புள்ளகளோடப் போட்டிப் போட்டு முன்னுக்கு வந்திருவா! அவளோட அப்பா நான் வாறேனோன.............. அந்த வகுப்பு டீச்சர்,பிரின்சிபல் எல்லோரும் ரொம்பச் சந்தோசமா கதப்பாங்க! எனக்கு வினோதாவ நெனச்சா ரொம்ம பெரும!..............' அவன் மார் தட்டிக் கொள்வதில் நியாயம் இருக்கிறது தானே!
ஸ்கொலசிப் பரீட்சையும் வந்தது. மகள் வினோதாவிற்கு காலையிலேயே அந்த கொலணியிலுள்ள மாரியம்மன் கோவிலிலே பூசை செய்து அன்று ஆட்டோவில் அவளுக்குப் பயணம். வினோதா மிக்க மகிழ்ச்சியானாள். எப்படியாவது பரீட்சையில் சித்யெய்து எனது அப்பா,அம்மாவிற்குப் பெருமை தேடித் தருவேன். அவள் திடசங்கற்பம் பூண்டள்.
பெட்ணி பெருமாள் தனது நிறைவேறப் போவதையெண்ணி தனது குடும்பத்தாருடன் தலச் சுற்றுலாச் சென்றது போல அந்த ஸ்கூலின் வெளியே அமர்ந்து மகளின் பரீட்சைக்காக வேண்டிக் கொண்டிருந்தான். பரீட்சை முடிந்து வெளியே வந்தாள் வினோதா. அவளது முகத்தில் இப்போதே சாதித்துவிடடதாய் ஒரு பேரானந்தம்! அள்ளியணைத்துக் கொண்டான பெருமாள்;.
மாதம் மூன்றாகியது.பெறுபேறும் வெளியாகியது. வினோதா அந்த ஸ்கூலில் மட்டுமல்ல.அந்த மாவட்டத்திலேயும் மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தாள். மத்திய மாகாணக் கல்வி அமைச்சு, அட்டன் கல்விக் காரியாலயம்,அமைச்சர்கள்,அரச சார்பற்ற நிறுவனங்கள் என பாராட்டு மழைகள் அவளுக்குக் குவிந்தன.பாடசாலையிலும் அவளுக்கு விசேட பாராட்டு விழா நடைபெற்றது.அவள் ஜப்பான் நாட்டிற்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தது.
'பெட்ணி' பெருமாளுக்கு ஓரே சந்தோசம்! அவளை ஜப்பானுக்கு அனுப்புவதற்கு முன்னதாக ஜனாதிபதியின் அலரி மாளிகை விருந்திலும் கலந்து கொண்டான்.தினமும் லயன்கள், சிறிய கட்டங்களை மட்டும் பார்த்த அவனுக்கு அந்த மாளிகை பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது!.
மகள் வினோதாவுடன் இலங்கையிலுள்ள ஏழு மாணவர்கள் ஜப்பான் பயணமானார்கள். வினோதா ஜப்பான் சென்று இன்றுடன் ஏழு நாட்களாகியது. அவளிடமிருந்து அவனது செல்ல அப்பாவிற்கு ஒரு கடிதம் வந்தது.
அன்புள்ள அப்பாவிற்கு............................
எனது இந்தப் பயணத்தில் பெரு மகிழ்ச்சியுடன் இருக்கின்றேன்.நமது வாழ்க்கையில் பிளேனைப் பற்றி படிக்க மட்டுந் தான் முடியும் என்று நினைத்தேன்.ஆனால் இவ்வளவு சீக்கிரமாக அதில் பயணம் செய்ய முடியும் என நினைக்கவில்லை.உலக வரைபடத்தில் ஜப்பானை கையால் அடையாளம் காட்டிய எனக்கு இன்று அந்த நாட்டில் மக்களையும் மண்ணையும் தரிசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.
அப்பப்பா. என்ன ஆச்சரியம்... எத்தனை உயர்ந்த கட்டடங்கள்......... எவ்வளவு அழகான இடங்கள்! விந்தை மிகு தொழிற்சாலைகள்! உழைக்கும் மக்கள்!சுறுசுறுப்பு என்றால் அதனை இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! எவ்வளவு தூய்மை! நம் ஊரில் தோட்ப் புறங்களில் நடக்க முடியாமல் பாதைகளிலெல்லாம் அசிங்கம் செய்கிறோம். ஆனால் இவர்கள் எச்சில் துப்புவதைக் கூட எவ்வளவு நாகரிகமாகச் செய்கிறார்கள்?
அப்பா...... இந்த ஊருக்கு உங்களையும் அழைத்து வரமுடியாமல் போனதையிட்டு மிகவும் மனம் வருந்துகின்றேன்.இங்கு சுவரில் உள்ள நீளமான பெட்டியில் குழுகுழுக் காற்று ஜில்லென்று வீசுகிறது! நாம் அங்கு இயற்கையாக எவ்வளவு சுத்தமான காற்றைச் சுhவசிக்கின்றோம். இங் கு எல்லாம் தொழில் நுட்பத்தில் தான் பெருகிறார்கள். எனக்கு ஒரு ஆசையிருக்கிறது அப்பா.............. ஒரு நாள் நான் நன்றாகப் படித்து இன்னும் உயரிய இலட்சியங்களுக்காக கடுமையமாக உழைப்பேன்.அதற்கு நீங்களும் அம்மாவும் நிச்யம் துணையிருப்பீர்கள் என நினைக்கின்றேன். காலம் வெகு தொலைவில் இல்லை. நிச்சயம் அது நம்மைக் கை கூடி வரும். அப்போது ஜப்பான் என்ன? எத்தனையோ நாட்டிற்கு உங்களையும் அழைத்துச் செல்வேன்.
இப்படிக்குச் செல்ல மகள.;
வினோதா.
கடிதம் வாசித்த பெருமாள் அந்தப் 'பெட்ணி' சாமான் பெட்டியையே பார்த்துக் கொண்டிருந்தான். அது அவனுக்குத் தொழிலாகத் தெரியவில்லை. இந்தக் கருப்புசாமி,முனியாண்டி சாமி,வாட்டுமுனி சாமியைப் போல இன்னொரு சிறு தெய்வமாகவே பட்டது. அவன் கண்களில் உதிர்த்த ஆனந்தக் கண்ணீருக்கு விலை அவனது உழைப்பும் வினோதாவின் விடாமுயற்சியும் தான் என்றால் நாம்.......... .என்ன.......................... இல்லையென்றா சொல்லப் போகிறோம்............................
முற்றும்.