Monday, April 25, 2011

சாணி – மருதாணி

மஸ்கெலியா பெ.லோகேஸ்வரன்

சாமி மூச்சுத் திணறிக்கொண்டான்.அந்த வடிகால் பாதையினூடாக அவனது கால்கள் தலையிலே விற்பனைக்காகக் கொண்டு செல்லும் கருவாட்டுப் பொதிகள்.வியர்வை வடிய கருவாட்டு மணமும் சேர்ந்து தலைப்பாகை வழியாக தலையைதொட்டு முகத்தை முத்தமிட்டுக் கொள்ளும்.அவன் உணவில் உப்பு சேர்க்கின்றானோ இல்லையோ ஒவ்வொரு நொடியும் அவனது வாயில் உப்புச் சேர்ந்து கொண்டே இருக்கும்.உழைப்பு! அவனுக்கு வியற் காலை ஆறு மனியிலிருந்து வீடு திரும்பும் வரை.ஒருவேளை அது மாலை ஆறுமணியாகவும் இருக்கலாம்.அல்லது இரவு பத்து மணியாகவும் இருக்கலாம்.அவன் கால்கள் வாகனம் அறியாது.நடைக்கு அவன் ராஜா.அவனது பாதம் கண்ட மைல்களைக் கணக்கிட்டால் அது ஆயிரக் கணக்கிலிருக்கும்.அவனுக்கும் காதல் வந்தது.கூடையில் கருவாடு சுமந்தாலும் மனம் கருவாடு அல்லவே!அவனது காதல் ஒரு அற்புதமான திறைமறைவிலிருந்து வெளிவராத ஓர் உண்மைக் காதல்!
அவனும் காதலித்துவிட்டான் என்றால் பாருங்கள்!

இராணித்தோட்டம்!அது பசுமையில் திளைத்த காலம்!சுமார் நூறு வருடங்களுக்கு முன்னால் இந்தியாவின் தமிழகத்து கூலிகள் என்ற பெயரில் அழைத்துவரப்பட்ட பட்டாளம்.அவர்களில் ஒரு பரம்பரை.ஊரில் மரியாதைக்குரிய பரம்பரை.அந்தக் காலத்திலேயே அச்சுமடியாத வேட்டி,பட்டன் இல்லாத சட்டை,சால்வை என ஊர் பெரிய மனிதராய் வலம் வந்தக் குடும்பத் தலைவன்.சற்றும் எதிர்த்துப் பேசாத குணவதி தாய்
குந்தாளம்.ஆண் பிள்ளையானாலும் சான் பிள்ளை என நான்கு ஆண் பிள்ளைகள்.ஆசைக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.இறுதி கடைக்குட்டி மீதுதான் சாமிக்கு ஒரு கண்!லெச்சுமி மாநிறம் தான்.ஆனாலும் அந்தக்கால சினிமா நடிகைளை ஞாபகப்படுத்துவாள்.
தினமும் பத்து மைல்களுக்கு மேல் உழைப்பிற்காக சாமி பயணித்தாலும் அவனது களைப்பேறிய முகம் அந்த லெச்சுமியின் முகம் கணடதும் மறந்து போவான்.மலைகளின் கொழுந்திற்குள்ளே அவளது முகம் கொழுந்தாய் இளமையாய் அவனது மனதை அள்ளிக் கோள்ளும்.பனிபடர்ந்தது கொழுந்துகளில் மட்டுமல்ல!அவளது முகத்திலும் தான்! சாமி மனதிலே கவலைபட்டுக் கொள்வான்.அவன் மனம் அடிக்கடி சபதம் எடுத்துக் கொள்ளும். “ பாப்பா! கவலைப்படாதே! இன்னும் சில நாட்கள் தான்.எப்படியும் உன் அப்பாவிடம் பெண் கேட்டு சம்மதம் வாங்கிவிடுவேன்” என்ற நம்பிக்கையை அவனது உதடுகள் அசைபோட்டுக் கொள்ளும்.
பாப்பா! வேறு யாருமல்ல!லெச்சுமி தான்.அவனுக்கு அவள் பாப்பாதான்.அவன் அவளை குழந்தையாகவே பார்க்கின்றான்.யார் மனமும் புண்படக் கூடாது என்பதில் சாமி உண்மையில் சாமி தான்.ஒற்றைக் கல் மூக்குத்தியுடன் லெச்சுமி தரும் ஒரு புன்னகைக்காக அவன் எதனையும் செய்யத் தயாராக இருந்தான்.
அன்று அந்த மலைகளிடையே லெச்சுமி தன் அக்காளுடனும் நண்பிகளுடனும் எங்கோ அவசரமாய் ஓடிக் கொண்டிருந்தாள். “என்ன இது? இப்படி லெச்சுமி எங்கே ஓடுகிறாள்?”என நினைத்து அவனும் பின் தொடர்ந்தான். “வெள்ளைக்காரத்துரை மிட்டாய் கொடுக்கிறாராம்.அது தான் இளசுகள் முதல் குஞ்சுகள் வரை இப்படி ஓடுதுங்க” என்றாள் பர்வதம் பாட்டி. “நல்ல மனசு படைச்ச வெள்ளக்காரனும் இருப்பது என்னவோ சந்தோசந்தானுங்க”சாமி மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
“என்ன! பாப்பா சொல்லியிருந்தா நான் வாங்கித் தந்திருக்க மாட்டேனா?இப்படி புள்ளங்களோட புள்ளயா அடிபட்டு இடிபட்டு இந்து முட்டாய வாங்கனுமா?” அவன் செல்லமாகக் கோபித்துக் கொண்டது லெச்சுமிக்கு மனதிற்குள் ஆனந்தம்.சாமி தன்னைத் தொடந்து காதலுக்காக வட்டமிடுவதை சொல்லாமல் அவள் இரசித்தாள்.
“என்னாங்க? ஒங்களுக்கும் முட்டாய் வேணுங்களா?வெள்ளைக்கார முட்டாய் நல்லா இருக்கும்”
“வேணாம்!வேணாம்! இப்படியெல்லாம் நீங்க போய் வாங்கிறது நல்லா இல்ல!ஒங்க அப்பாவுக்கு இருக்கிற மவுசுல இப்படி செய்யலாமா?”
சாமி தனக்கு விருப்பம் இல்லாததை நாசுக்காக அவளது தந்தைக்குப் பிடிக்காது என்று கூறுவதை அவள் உணர்தாள்.
“சரிங்க!இனிமே நான் வாங்கமாட்டேன்.நீங்க வாங்கித் தாறீங்களா?”
“அதுக்கு என்னா புள்ள! வாங்கித் தந்தா போச்சு”
“என்னாங்க!எப்ப வந்து அப்பாகிட்ட பொண்ணு கேக்கப்போறீங்க!எங்க அத்தான் வேற எடத்துல எனக்குப் பொண்ணு பார்க்கப் போறாரு!”
“என்னாப்புள்ள செய்யிறது?எனக்கிருக்கிறது ஒரு அண்ணன்.அவனும் மூத்த தாரத்து பிள்ள.அவன் இதுல எல்லாம் அக்கறை எடுக்க மாட்டானே!அதுனால தான் யோசிச்சுட்டு இருக்கேன்.கொஞ்சம் பொறு!அடுத்த
மாசத்துக்கு முன்னாடி பொண்ணு கேட்க வந்துடுறேன்.சந்தோசமா?”
அவன் பதில் அவளுக்கு ஆறுதல் அளித்தது.ஆனால் எத்தனை முறை? இப்படியான பதில்களைக் கேட்டு அலுத்துப் போனாள் லெச்சுமி.ஆனாலும் அவன் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அவளை மறு வார்தைப் பேசவிடவில்லை.
சாமிக்கு ஏன் யாருமில்லை?நீங்கள் யோசிப்பது புரிகிறது.அவனுக்கு ஐந்து வயதிருக்கும்.இந்தியாவில் அவனது தந்தை இறந்து போனார்.அவனுக்கு உணவு சாப்பாடு தந்து வேலை தர முன்வந்த தனவந்தருடன் ஒரு பையுடன் அவன் கிளம்பி விட்டான்.அவன் வந்த இடம்.டிக்கோயா.அங்கே தான் அவன் வாழ்க்கை புதிய கோணத்தில் ஆரம்பமாகியது.அதன் பிறகு நல்லதண்ணி லக்கசபான கடையில் அவனது வாலிப்க காலம்.அங்கிருந்து கங்கேவத்தை பசாரில் ஒரு கடைக்கு பங்குதாரராகவும் பிறகு தனிக் கடைக்கு உரிமையாளராகினான்.வாழ்க்கைத் துணைக்காக அந்த இராணித்தோட்டத்திற்குள் அவன் கால்கள் படாத இடமே இல்லை.

சாமி உறவுளல்தான் தனி மனிதன்.ஆனால் அவனுடைய நட்பு வட்டம் மிகப் பெரியது.அது ஆழ்கடலிலும் விரிவானது.அவனை அறியாத தோட்டத்து மக்கள் மட்டுமல்ல.சிங்களவர்,தமிழர்.முஸ்லிம்,கிறிஸ்தவர் என மிக பெருங்கூட்டம்.அவனது நட்புக் கூட்டம்.
யாருக்கும் ஓடிப் போய் உதவும் பண்பு!சிரித்த முகம்.குள்ளமானாலும் கள்ளமில்லா உள்ளம்.சுருட்டை முடியிலான கேசம்.ஆண்களுக்கே உரித்தான புஜ வலிமை எல்லாம் அவனிடம் வெற்றிக் கொடி நாட்டியிருந்தன!
லெச்சுமி தான் அவனது வாழ்க்கைத் துணை.அவன் அதில் திடசங்கற்பமாயிருந்தான்.அவனுக்காக தூரத்து உறவுகளும் நண்பர் கூட்டமும் பல முறை அந்தத் தோட்டத்து கதவினை தட்டிப்பாரத்து இருக்கிறது.
“அவனுக்கு, சொந்தமுன்னு சொல்லிக் n காள்ள யாருமில்ல!அநாதை மாதிரி இருக்கான்.அவனுக்கு ஏம் பொண்ண கொடுக்க முடியாது”
அந்த வாசகம் அந்தத் தோட்டம் முழுக்க மட்டுமல்ல!அந்த மஸ்கெலியா கங்கேவத்தை பசார் முழுக்க தம்பட்டம் அடிக்கப்பட்ட விடயம்.அவன் பலமுறை மனதிற்குள்ளே புளுங்கிப் போயிருக்கிறான்.இதில் அவளது தமக்கையின் கணவனின் இடைய+று வேறு.பணக்கார மாப்பிள்ளை தேடி அவனது அலைச்சலும் கொஞ்சநஞ்சமல்ல.
“ஒரு தூக்கிப் பொருளை விற்கும் ஒருவனா எனக்குச் சகலை ஆவது?” அவனது கௌரவப் பிரச்சினை அது!.
சாமி இந்தப் பேச்சுகளுக்கெல்லாம் அசரவில்லை.அவன் திடமாயிருந்தான்.லெச்சுமி மீது அவன் வைத்திருந்த நம்பிக்கை போல அவளுக்கும் அந்த நம்பிக்கையில் மாற்றமில்லை.ஆனால் பல சொந்தங்கள் அவள் மனதைக் கறைத்தன.
“இங்க பாரு புள்ள!அவன் சொந்தமுன்னு சொல்ல யாருமில்லாம நிக்கிற ஒருத்தன்.நாளக்கி நல்லது கெட்டதுன்னா யாருட்ட போயி நிக்கிறது?”
பர்வதம் பாட்டியின் எச்சரிக்கையும் நச்சரிப்பும் அவளால் தாங்க முடியவில்லை.
“அவன் ஊரு ஊரா சுத்துறவன்.யாரு கண்டா எங்கெங்க பொண்டாட்டி இருக்கோ?” போதாக் குறைக்கு வெள்ளையம்மாவின் தாய் வேறு அவளுக்கு எடுத்துக் கொடுக்கிறாள்.
“இங்க பாருங்க!யாரு சொன்னாலும் என்னுட்டு மனச மாத்திக்கமாட்டேன்.அவரோட தான் வாழுவேன்.என்ன யாரும் கட்டாயப்படுத்த வேணாம்” அது வரை அவளது தந்தையைப் பாரத்து ஆறடி தூரம் தள்ளி நிற்கும் லெச்சுமியின் பேச்சு அனைவரையும் திகைக்க வைத்தது.
அன்று ஒரு புதன் கிழமை வைகாசித் திங்கள்.ஒரு படையே பெண் கேட்டு இந்த தோட்டத்து மாரியம்மன் லயத்தைச் சூழ்ந்து கொண்டது.அதற்கு ஆதரவு தெரிவிக்க தோட்டத்துப் பெருசுகளும் ஒன்று கூடி விட்டன. லெச்சுமியின் தந்தைக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.
“எனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாமல் இல்ல!ஆனா நாளக்கி அவுங்களுக்கு யாரு இருக்கா?நல்லது கெட்டது எல்லாம் இனி தானே வரும்?” என்ற அவருடைய தயக்கம் நியாயமானதாகப் பட்டாலும் கூட்டம் நட்புக் கூட்டமல்லவா? விடுமா என்ன?
“என்னாங்க ஐயா! ஒங்க சொந்தக்காரங்கன்னு எடுத்துக்கிட்டா என்ன ஒரு நூறு பேரு வருமா?ஆனா நாங்க பாருங்க!ஒரு ஊரே தெரண்டு வந்திருக்கோம்ட.பயப்படாதீங்க.நாங்கல்லாம் விட்டுருவோமா?”
ஆமாம்.அந்த தோட்டம்,நகரம் மட்டுமல்லா.சாமியின் அன்பிற்குள் ஒரு பிரதேசமே கட்டுண்டுண்டுப் போயிருந்ததை அனைவரும் அறிவார்கள்.அவர்களது கல்யாணம் விமரிசையாக பல நூற்றுக்கணக்கான உறவுகள்,நண்பர்கள் என புடைசூழ நிறைவேறியது.
ஒரு அநாதை என்ற வரைவிலக்கணம் தந்த உறவுகளிலிருந்து மீண்டு சாமி இன்று சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தானோ இல்லையோ நல்ல பிள்ளைகளைப் பெற்றான் என்ற பெயருடன் உலாவந்தான்.சாமி தன் இறுதிக காலம் வரை பிள்ளைகளின் வெற்றிக்காக மட்டுமல்ல லெச்சுமியின் சந்தோசத்திற்காகவும் வாழ்ந்து மறைந்தான்.அவன் மறைவு அந்த மஸ்கெலியா நகரத்திற்கே ஒரு இழப்பாயிருந்தது.உறவுகளுக்கு அப்பால் சாமி எல்லோருக்கும் ‘மாமா’ வாகினான்.அவனது மரணம் அவன் சம்பாதித்த மனிதச் சொத்துக்களை மட்டுமே அடையாளம் காட்டி நின்றன.ஆயிரக் கணக்கான மக்களின் கண்ணீருடன் அவனது உடல் அலங்காரமாய் அதே இராணித் தோட்டத்து சுடுகாட்டில் தீயிற்குச் சங்கமமானது.
அந்தத் தோட்டத்து சுடுகாட்டு மலையின் மூலையில் லெச்சுமிக்காக அவன் இட்ட மருதாணி இன்னும் அழகாகவே சிவந்தது.அன்று பயந்து யார் வருவார்களோ?என்ன சொல்வார்களோ?என்ற அவனது பயம் இப்போது இல்லை.பல நாட்கள் மருதாணி என்று அவளுக்காக சாணியை விரல் நுணிகளில் இட்டு அவளை ஏமாற்றியபோது அவள் கொண்ட சினம் அவனது ஊடலுக்கும் கூடலுக்கும் வித்தாயிருந்ததை மறக்கமுடியுமா?ஏனென்றால் லெச்சுமி அவன் மனைவியல்லாவா?இடம் சுடுகாடு தான்.ஆனால் லெச்சுமிக்காக மருதாணியை அவன் இன்னமும் வைத்துக் கொண்டு காத்திருக்கின்றான்.அவள் வரும் வரைக்கும் அந்த மருதாணிக் கனவுகள் சாமியிடம் வாழ்வதில் தப்பில்லை தானே!ஓரே ஜாதிக்குள் அநாதை என்று வரும்போது சாமி கண்ட வேதனைகள் இனி எவரையும் தொடக்கூடாது என்பது தான் அவனது விருப்பமுங் கூட.
முற்றும்

No comments:

Post a Comment